Monday, November 21, 2011
திருக்குறளில் கொல்லாமை அறம்
திருக்குறளில் கொல்லாமை அறம்
தமிழ் இலக்கியத்தில் ஒப்பில்லா மணியாய் திகழ்வது, திருக்குறளாம்.
“Books are the reflection of the society” என்பார்கள். நூல் ஆக்குவோர்
தாங்கள் அறிந்தோ அல்லது அறியாமலோ தாங்கள் வாழ்ந்த காலத்தின் சமூக அமைப்புகளையும், சமூக பண்பாட்டுக் கூறுகளையும் தங்கள் எழுத்தில்
படம் பிடித்துக் காட்டுவார்கள். அங்ஙனமே, திருக்குறளாசிரியரும் அற்றை
நாளில் உள்ள சமூக அமைப்புகளையும், சமூக பழக்க வழக்கங்களையும்
நமக்கு தன் குறள் பாக்களில் படம் பிடித்துக் காட்டுகிறார்.
கொல்லாமை அறம்
அகிம்சை அல்லது கொல்லாமை என்ற அறம் திருக்குறளின் அடிநாதம்
எனலாம். கொல்லாமை என்பது கொல்வதின் எதிர்ப் பதம் என்ற கருத்தில்
அமைந்ததன்று. கொல்லாமை என்பது அறங்களின் தொகுப்பு. உடலாலும்,
மனத்தாலும், மொழியாலும் பிறருக்கு (பிற உயிர்களுக்கு) யாதொன்றும்
கெடுதலில்லாது அமைவது அகிம்சை எனப்படும்.
அகிம்சையின் சாரமாக எழுதப்பட்ட அதிகாரங்களாவன,
1. அருளுடைமை
2. புலால் மறுத்தல்
3. தவம்
4. வாய்மை
5. இன்னா செய்யாமை
6. கொல்லாமை
ஆகிய அதிகாரங்களில் அடிநாதமாக திகழ்வது அகிம்சை என்னும் கொல்லாமை
அறமே.
சிலர், இவ்வதிகாரங்கள் துறவறத்தார்க்குச் சொல்லப்பட்டது என்பார்கள்.
துறவற இயலில் கூறப்பட்டிருக்கிறது என்பது உண்மை தான். இதனால்,
அவ்வதிகாரங்களில் கூறப்பட்ட கருத்துக்கள் இல்லறத்தாருக்கு இல்லையென்று
கூறிவிட முடியுமா? இதில், தவம் என்ற அதிகாரம் தவிர்த்து, மற்ற
அதிகாரங்கள் அருளுடைமை, வாய்மை, இன்னா செய்யாமை, புலால்
மறுத்தல் ஆகியவை இல்லறத்தார்க்கும் பொதுவே. பொதுவாக, அதிகாரங்கள் உரையாசிரியர்களால் தொகுக்கப்பட்டது என்பது அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. குறளுக்கு ”தருமர்” உரைதான் முதல் உரை.
இவர் சமணராகவோ அல்லது பெளத்தராகவோ இருக்கலாம். தருமர்
என்ற பெயர் இருசாராருக்கும் உரித்து. எனினும், சமணர் என்று
பெரும்பாலான அறிஞர்கள் கூறுப.
மணக்குடவர்
தற்போது கிடைத்துள்ள உரைகளில் முதல் உரை மணக்குடவர் உரை.
இவர் சமணர் என்பது வெள்ளிடை மலை. ஆயினும், இவர் உரை முழுதும்
கிடைத்தில. முதன் முதல் திரு.வ.உ.சிதம்பரனார் என்பார் உரை கிடைக்காத
உரைகளுக்கு (பரிமேலழகர் உரையைச் சார்ந்து) தன் உரையை எழுதிப்
போந்தார். இதனால் எது, எது மணக்குடவரின் உண்மையான உரை என்பது
இலைமறை காய்மறைதான். (இவற்றை பற்றி வேறொரு கட்டுரையில்
பார்க்கலாம்)
வாய் உபதேசம்
அற்றை நாளில், சமண தரிசனம், பெளத்த தரிசனம், வேத தரிசனம்1 மற்றும்
ஆசிவக தரிசனங்கள் தமிழகத்தில் இருந்தன. அவற்றையும் குறள் பதிவு
செய்திருக்கிறது. பெளத்தம், சமணம் ஒத்த மூலம் கொண்டிருந்தாலும்,
அவற்றுள் வேறுபாடுகள் தெற்றென விளங்கும். அதுபோல, கொல்லாமை
அறம் பெளத்தத்திற்கும், சமணத்திற்கும் பொதுவான அறம் என்றாலும்,
கொல்லாமையால் விளங்கும் புலால் மறுத்தலில் பெளத்தம், சமணத்திலிருந்து வேறுபடுகிறது. எங்ஙனமெனில், பெளத்தர்கள் தங்கள் கைகளில் ஓர்
உயிரையும் கொன்று, அதில் கிடைக்கும் ஊன் உணவினை உண்ண
மாட்டார்கள். ஆனால், பிறர் யாராவது ஓர் உயிரைக் கொன்று ஊன்
உணவினைக் கொடுத்தால் அவற்றை புசிப்பார்கள். அதனால் கொல்லாமை
அறம் என்பது அவர்களுக்கு வெறும் வாய்மொழி உபதேசம் மட்டுமே.
இவற்றையும் குறள் கண்டித்திருக்கிறது.
விலைப்பொருட்டால் வரும் ஊன்
புலால் மறுத்தல் அதிகாரத்தில் வரும் குறள்,
“தினற்பொருட்டால் கொல்லா துலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்” – குறள் – 256
மணக்குடவர் உரை:
தின்னுதற்காக உலகத்தார் கொள்ளாராயின், விலைக்காக ஊன் விற்பார்
யாரும் இல்லை.
இது கொன்று தின்னாது விலைக்குக் கொண்டு தின்பார்க்குக் குற்றமென்னை
யென்றார்க்கு, அதனாலுங் கொலைப்பாவம் வருமென்று கூறிற்று.
என்று கூறுவதால், குறளாசிரியர் பெளத்த தரிசனத்தை கடிந்தார் என்பது
உள்ளங்கை நெல்லிக்கனி.
கொன்றாகும் ஆக்கங் கடை
அவ்வாறே, கொல்லாமை என்னும் அதிகாரத்தில்,
“நன்றாகும் ஆக்கம் பெரிதெனினுஞ் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கங் கடை” – திருக்குறள் – 328
மணக்குடவர் உரை:
நன்மையாகும் ஆக்கம் பெரிதேயாயினும், ஓருயிரைக் கொன்று ஆகின்ற
ஆக்கம் உயர்ந்தோர்க்கு ஆகாது.
இது பெரியோர் வீடுபேற்றை விரும்பிக் கன்மத்தை விடுத்தலால்,
வேள்வியின் வருங் கொலையும் ஆகாதென்றது.
என்று வேள்வியின் பொருட்டு இன்னுயிர்களை கொல்வதையும் கூடாது
என்று எடுத்துக் கூறி, குறளாசிரியர் வேத தரிசனத்தையும் கடிந்திருக்கிறார்
என்பது நிதர்சனம்.
முயற்றின்மை இன்மைப் புகுத்தி விடும்
ஆசிவகத் தரிசனத்தை கண்டித்திருக்கிறாரா என்ற கேள்விக்கு பதிலாக,
ஊழ்க் கொள்கையை நியதிக் கோட்பாடாகக் கொண்டிருக்கும் ஆசிவக
தரிசனத்தையும்,
“ஊழையும் உப்பக்கங் காண்பர் உலைவின்றித்
தாழா துஞற்று பவர்” – குறள் – 620
என்ற 620 ஆவது குறளிலும்,
“முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்”
என்ற 616 ஆவது குறளிலும் ஆசிவகத் தரிசனத்தைக் கண்டிக்கிறார் நம்
தேவர் பெருமான் (குறளாசிரியர்).
(என்ன முயற்சி செய்தாலும் ஊழிலிருந்து யாரும் தப்பமுடியாது என்பதுதான்
ஆசிவக தரிசனத்தில் கூறப்படும் முக்கியக் கோட்பாடு)
ஒன்றாக நல்லது கொல்லாமை
சமணத்தின் முதல் அறம் கொல்லாமை. இரண்டாவதாக சொல்லபடுவது
பொய்யாமை2 என்ற அறம். இதனை குறளாசிரியர்,
“ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று”
என்ற 323 ஆவது குறளிலும்,
”தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறி
தின்னுயிர் நீக்கும் வினை”
என்ற 327 ஆவது குறளில் கூறுவதாலும், சமண தரிசனமே
கொல்லாமை அறத்தை3 தங்கள் வேதமாகக் கொண்டிலங்குவதாலும்,
குறளாசிரியர் சமணத் தரிசன கோட்பாடுகளை, எல்லா தரப்பு மக்களும்
உய்யவேண்டி அக்கோட்பாடுகளுக்கு அழகான அணிக்களன்கள் பூட்டி,
நம் அனைவருக்கும் தந்தருளியிருக்கிறார். அவற்றை அணிந்து, ஆன்மப்
பயன் பெறுவோம்!
வாழ்க திருவறம்! வளர்க குறளறம்!!
இரா.பானுகுமார்,
சென்னை
=========================================================
குறிப்புகள்:
1. திரிகடுகப் பாடல்: http://banukumar_r.blogspot.com/2011/11/1.html
2. விரையார் மலர்மிசை வருவார் திருவறம்
விழைவார் கொலையினை விழையார்; பொய்
உரையார்; களவினை ஒழுகார்; பிறர்மனை
உவவார்; மிகுபொருள் உவவார்; வெம்
கரையால் உணர்வினை அழியார்; அழிதசை
துவ்வார்; விடமென வெவ்வாறும்
புரையார்; நறவினை நுகரார்; இரவுணல்
புகழார்; குரவரை இகழாரே” – திருக்கலம்பகம்
3. ”நசைகொல்லார் நச்சியார்க்கு என்றும் இளைஞர்
மிசை கொல்லார் வேளாண்மை கொல்லார் – மிசைகொல்லார்
பொன்பெறும் பூஞ்சுணங்கின் மென்முலையாய் நன்குணர்ந்தார்
என் பெறினும் கொல்லார் இயைந்து – சிறுபஞ்சமூலம் – 48
Thursday, November 17, 2011
சமண வழிபாடு – விளக்கம்
சமண வழிபாடு – விளக்கம்
சமணம் நாத்திகச் சமயம்! சமணர்களுக்கு இறை வழிபாடு இல்லை!
என்பன போன்றக் கருத்துக்கள் சமணத்தின் மீது தொன்றுத் தொட்டு கூறப்பட்டு
வரும் பழிப்புரைகள். அவ்வகையான பழிப்புரைகள் திட்டமிட்டு பரப்பப்பட்டதா?
அல்லது சமணம் பற்றி அறியாமல் கூறப்பட்டதா என்ற வாதத்திற்குள்
போகாமல் நாம் மேலே செல்வோம். பண்டைத் தமிழகத்தில் கோலோச்சிய
இச்சமயம் இன்று மிக அருகிவிட்டது. தற்போதைய கணக்கின்படி சுமார்
ஒரு இலட்சம் தமிழ்ச் சமணர்களே வாழ்கிறார்கள்.
இதில் வேடிக்கை என்னவென்றால், இன்றும் அவ்வகையான பழிப்புரைகளை
நம்புவதோடு மட்டுமல்லாமல், அவற்றை தங்கள் கருத்திற்கும் ஆதாரமாகவும் கூறிக்கொள்கிறார்கள். சிலர், இவ்வகையான பழிப்புரைகளை கூறுகிறோமே
அவற்றுக்கு ஆதாரம் ஏதேனுமுண்டா என்று ஆராய்ந்துப் பார்ப்பதில்லை.
இன்னும் சிலர், அவ்வகையான பழிப்புரைகளை, சந்தர்ப்பம் கிடைக்கும்
இடங்களில் எல்லாம் வேண்டுமென்றே பரப்பி வருகிறார்கள்.
இவ்வகையான பழிப்புரைகளை ஒரே வாக்கியத்தின் மூலம் புறம்
தள்ளிவிடலாம். இந்திய வரலாற்றின் ஆவணப்படி (மொஹிஞ்சதாரோ –
ஹரப்பா தவிர்த்து) சமண சிலைகள் கி.மு. ஒன்றாம் நூற்றாண்டு முதல் காணக்கிடைக்கின்றன. சிலைகள் என்றால் வழிபாடு இருந்திருக்கும் என்று சொல்லவேண்டுவதில்லை. :-)(ஆதாரம்: மதுரா அகழ்வாராய்ச்சி1)
தமிழகத்தைப் பொருத்தவரை, இலக்கியங்களில் குறிப்பாக மதுரைக்
காஞ்சி2 என்ற நூலிலும் சமணர்கள் இறைவழிபாடு செய்ததாகக் குறிப்புகள்
இருக்கின்றன.
வழிபாடு
வழி + படு என்பது வழிபாடு ஆகிற்று. வழிபடுதல் என்றால் நாம்
தொழத்தக்கவர்கள் யாரோ, அவர்களை வழிபடுவது. அவர்கள் சென்ற
வழியே அல்லது காட்டிய வழியை நாம் பயனிப்பது என்பது அதன்
நுண்ணியக் கருத்து. சமண வழிபாட்டின் நோக்கமும் அதுவே.
பாத வழிபாடு
பாத வழிபாட்டிலிருந்தே உருவ வழிபாடு தோன்றியது. இந்திய வரலாறு
நமக்குக் காட்டுவதும் அதுவே! சமணம் முழுமுதற் இறைவன் ஒருவனால் படைக்கப்பட்டதல்ல. சமணமும், பெளத்தமும், மனிதனால் உருவாக்கப்பட்ட
சமயங்கள். சமணம் போற்றும் தீர்த்தங்கரர்கள், நம்மை போன்று தாயின்
வயிற்றில் பிறந்து, பின் ஆன்மீயப் பயனத்தில், படி படியாக தங்கள் ஆள்வினை முயற்சிகளினால் இறைநிலை அடைந்தவர்கள். அவர்கள் தேசந்தோறும் திரிந்து
மக்களுக்கு அறிவுரைப் பகர்ந்து, தாங்கள் சென்ற மார்க்கத்தை/வழியை
மற்றவர்களும் உபதேசித்து அருளினார்கள். இதனால் இறைவன் என்ற பதம்
அல்லது சொல் தலைவன் என்றும் முனிவன்3 என்றும் சமணத்தில்
கொள்ளப்படுகிறது. அவர்களின் நினைவாக, மனிதர்களால் செய்து
வழிபட்டதுதான் பாதுகைச்/பாதச் சிற்பங்கள். இவ்வகையான பாத சிற்பங்கள்
இந்திய நாட்டின் முழுமையும் காணலாம்.
வழிபாட்டின் நோக்கமே, பெரியவர்கள்/தலைவர்கள்/சான்றோர்கள் சென்ற பாதையை/வழியை நாமும் பின்பற்ற வேண்டும் என்பதே! அஃதாவது,
அவர்கள் வழங்கிய/அருளிய அறக்கோட்பாடுகளை நாமும் பின்பற்ற வேண்டும்
என்பதின் குறியீடே இவ்வழிபாடு.
சாமாயிகம்4 அல்லது அறசிந்தனை
சமண இல்லறத்தார்கள் நாள்தோறும் குறைந்தது ஒரு வேளையாவது
அருக வழிபாடு செய்யவேண்டும். அருகரின் உருவ சிலையை மனதில்
நிறுத்தி, அவர் உபதேசித்தருளிய அறகோட்பாடுகளை நினைத்து அற வழிப்படல்
வேண்டும் என்பதுதான் சமணர்கள் கூறும் இறைவழிபாட்டின் நோக்கம்.
கதை கேளு
(எம் பெரியவர் திருவாளர்.வி.சி.ஸ்ரீபால் அவர்களின் கதையை இங்கு
எடுத்துக்காட்டி இருக்கிறேன். அன்னாருக்கு நம் மனமார்ந்த நன்றிகள்)
சமண இறைவழிபாட்டிற்கும், மற்ற சமயங்களின் இறைவழிப்பாட்டிற்கு
நுண்ணிய வேறுபாடுண்டு. அவற்றையும் ஈண்டு ஒரு கதையின் மூலம்
பார்ப்போம்.
ஒர் ஊரில், ஒரு பள்ளியில், தமிழ் ஆசிரியர் ஒருவர் இருந்தார். அவர்
உண்மையின் உறைவிடம்; நேர்மையின் அடையாளம்; தமிழ்ப் பண்டிதர்;
புலமையில் பேரறிஞர். அப்பள்ளியில், மாணவர்களால் மிக விரும்பப்படுபவரும்
அவரே. மாணவர்கள் அவரின் வகுப்பில் மிக ஈடுபாட்டுடனும், மிக ஆர்வமுடனும்
பாடம் கேட்பார்கள். ஆனால், பரிட்சையில் அவ்வாசிரியரின் பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை! ஏன்?
அதே ஊரில் உள்ள வேறொரு பள்ளியில் தமிழாசிரியர் ஒருவர் இருந்தார்.
அவரும் முன்னர் சொன்ன ஆசிரியர் போல் அனைத்து குணங்களும் நிரம்ப
பெற்றவர். அவரும் மாணவர்களால் விரும்பப்படுபவர். மாணவர்கள், இவரின்
வகுப்பு எப்போது வரும் என்று ஆர்வமாகக் காத்திருப்பார்கள். ஆனால்,
இவ்வாசிரியரின் மாணவர்கள் அனைவரும் பரிட்சையில் தேர்ச்சியடைந்தார்கள்!
எப்படி?!!
முதலில் சொன்ன மாணவர்கள் பரிட்சையில் ஆசிரியரின் குணங்களையும்,
அவரின் ஆற்றல்களை போற்றி, புகழ்ந்து எழுதினார்கள். ;-)
ஆனால், பின் சொன்ன மாணவர்களோ, பரிட்சையில் தங்கள் ஆசிரியர் கற்றுக்
கொடுத்த பாடங்களைக் கொண்டு பதில் எழுதினார்கள்!! தேர்ச்சியும் பெற்றார்கள்.
முன்னது மற்ற சமயங்களின் வழிபாடு!
பின்னது சமண சமயம் போதிக்கும் வழிபாடு!
நுண்ணியதாக இருந்தாலும், அவைக் காட்டும் கோட்பாட்டில் எத்தனை
வித்தியாசங்கள்!!
சமணம், வழிபாட்டில் வியாபாரம் நோக்கம் இருக்கக் கூடாது என்று சொல்கிறது. அஃதாவது, தனக்கு ஒன்று வேண்டும் என்று இறைவனிடம் முறையிடுவதை அது
அற வியாபாரம் என்று சொல்கிறது. ”இத்தை” வியாபாரம் என்று சொல்லாமல்
வேறென்ன வென்று அழைப்பது? சிந்தியுங்கள்!
குறளாசிரியரான தேவர் பெருமான் இறைத் தன்மைகளில் ஒன்றாக
“வேண்டுதல் வேண்டாமை இலான்” என்ற குணத்தைக் குறித்திருக்கிறார்.
வேண்டுதல் வேண்டாமை இலான் என்றால் “விருப்பு – வெறுப்பு” என்ற
பேதம் அற்றவர் என்றுப் பொருள். அவரை வணங்கினால் நமக்கு
நன்மைகளையும், நம்முடையத் துன்பங்களையும் போக்குவார் என்று
நினைத்து வணங்குவதும், அவரைத் தூற்றினால் நமக்கு கெடுதல்
செய்வார் என்று நினைப்பதும் “தேவ மூடமாம்5”.
வேண்டுதல் வேண்டாமை இலான்
இங்கு அன்பர்களுக்கு ஒரு கேள்வி எழலாம்? எழவேண்டுமே!! ;-)
குறளாசிரியர் குறள்,
“வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல” – குறள் – 4
வேண்டுதல் வேண்டாமை இல்லாதவனான இறைவனை வணங்கினால் எந்த
துன்பமும் வராது என்று சொல்கிறாரே என்று கேட்டீர்களானால், பதில் அதிலேயேயிருக்கிறது.
வேண்டுதல் வேண்டாமை இல்லாத குணம் கொண்டவன் இறைவன் என்று
கூறும் குறளாசிரியர், அவரை வணங்கினால் நம்முடையத் துன்பங்களை
இல்லாமல் செய்துவிடுவார் என்று முரணாக எழுதுவாரா? சிந்தனை செய்
மனமே!
அக்குறளுக்கு அவ்வாறு பொருள் கொள்ளக் கூடாது!
அக்குறளுக்கு பொருள்தான் என்ன?
வேண்டுதல் வேண்டாமை இல்லாத இறைவன் காட்டிய மார்க்கத்தில் அல்லது
அறவழியில் நடந்தால் நாமும் அவர் சென்றடைந்துக் காட்டிய வீடுபேற்றை
அடையலாம் என்பதுதான் அக்குறளின் உட்பொருள்.
குறளின் விசேஷமே அதுதான். குறளறம் எல்லா தரப்பு மக்களுக்கும்
கூறப்பட்டது. மக்கள் எல்லா நிலைகளிலும் இருப்பர். அவரவர் நிலைகளில்
(ஆன்மிகப் பயணத்தில்) புரியும் வண்ணம் குறளறம் கூறப்பட்டிருக்கிறது.
விளிம்பு நிலை மாந்தர்களுக்கும் குறளறம் பயன்படவேண்டுமல்லவா!
இன்னும் சந்தேகம் தெளியாதவர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு மேலும் ஒரு
காட்டுக் கொடுத்தமைவோம்.
நிலமிசை நீடுவாழ்வர்
திருக்குறளின் 3ஆவது பாட்டு,
“மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்”
மலர்மேல் நடந்தவனது அடிகளை சேர்ந்தவர்கள் நிலத்தின்/பூமியின் கண் நீடு
வாழ்வார்கள் என்று பொருள் எடுத்துக் கொண்டால்; பிறந்தவர்கள் இறப்பது
நிச்சயம் தானே. அது தானே உலக நடப்பு. அப்படியிருக்குபோது குறளாசிரியர்
நிலத்தின் கண் நீடு வாழலாம் என்கிறாரே. அவருக்கு உலக நடப்பு தெரியாமல் எழுதிவிட்டாரா? அவ்வாறுக் கூறுதல் கூடாது.
விளிம்பு நிலை மாந்தர்கள் அவ்வாறு பொருள் கொள்ளலாம். ஆனால்,
விளிம்பு நிலையிலிருந்து உயர்ந்தவர்கள் அவ்வாறு பொருள் கொள்ள
மாட்டார்கள்.
பிறந்தவர்கள் இறந்தே ஆகவேண்டும் என்ற வகையில் பார்த்தால், இங்கே
நிலமிசை நீடுவாழ்வார் என்பது மலர்மேல் நடந்தவனை வழிபட்டால் அல்லது
அவர் அருளிய அறவழிபடி நடந்தால், சம்சார சுழற்சியில் இருந்து விடுபட்டு,
நிலம்-பூமியின் உச்சியில் (வீடுபேறடைந்த உயிர்கள் தங்கும் இடம்) நீடு
வாழலாம் என்பதுதான் அக்குறளின் நுண்ணியப் பொருள்! என்னை?
இரா.பானுகுமார்,
சென்னை
==============================================
குறிப்புகள்:
1. "Historian and renowned archaeologist Fuhrer narrates the antiquity of Jainism at Mathura like this: "This stupa is so ancient that till writing of the inscription the original description of the stupa has gone out of local populace's memory." Innumerable Jain sculptures discovered from several sites at Mathura prove beyond doubt that Jainism remained prevalent in this region for many centuries and also got patronage of many of the contemporary successive rulers of this part of the world."
( http://en.brajdiscovery.org/index.php?title=Mathura )
( http://www.cs.colostate.edu/~malaiya/mathura.jpg )
2. மதுரை காஞ்சி:
வண்டுபடப் பழகிய தேனார் தோற்றத்துப்
பூவும் புகையும் சாவகர் பழிச்சச்
சென்ற காலமும் வரூஉம் அமயமும்
இன்றிவண் தோன்றிய ஒழுக்கமொடு நன்குணர்ந்து
வானமும் நிலனுள் தாமுழுதுணரும்
சான்ற கொள்கைச் சாயா வாழ்க்கை
ஆன்றடங் கறிஞர் செறிந்தனர் நோன்மார்
(அடிகள் : 475-482)
........................... .................
.................... வயங்குடை நகரத்துச்
செம்பியன் றன்ன செஞ்சுவர் புனைந்து
நோக்குவிசை தவிர்ப்ப மேக்குயர்ந்தோங்கி
இறும்பூது சான்ற நறும்பூஞ் சேக்கையும்
குன்றுபல குழீஇப் பொலிவன தோன்ற
(அடிகள் : 484-488)
( http://www.tamilvu.org/courses/diploma/a071/a0713/html/a0713112.htm )
3. மயிலையாரின் "ஆய்வுக் கட்டுரைகள்" - மூன்றாம் தொகுதி - மக்கள்
வெளியீடு
( http://www.treasurehouseofagathiyar.net/29800/29834.htm )
4. http://www.treasurehouseofagathiyar.net/37700/37787.htm
5. வாழ்விப்பர் தேவர் எனமயங்கி வாழ்த்துதல்
பாழ்பட்ட தெய்வ மயக்கு - அருங்கலச் செப்பு - பாடல் - 31
சமணம் நாத்திகச் சமயம்! சமணர்களுக்கு இறை வழிபாடு இல்லை!
என்பன போன்றக் கருத்துக்கள் சமணத்தின் மீது தொன்றுத் தொட்டு கூறப்பட்டு
வரும் பழிப்புரைகள். அவ்வகையான பழிப்புரைகள் திட்டமிட்டு பரப்பப்பட்டதா?
அல்லது சமணம் பற்றி அறியாமல் கூறப்பட்டதா என்ற வாதத்திற்குள்
போகாமல் நாம் மேலே செல்வோம். பண்டைத் தமிழகத்தில் கோலோச்சிய
இச்சமயம் இன்று மிக அருகிவிட்டது. தற்போதைய கணக்கின்படி சுமார்
ஒரு இலட்சம் தமிழ்ச் சமணர்களே வாழ்கிறார்கள்.
இதில் வேடிக்கை என்னவென்றால், இன்றும் அவ்வகையான பழிப்புரைகளை
நம்புவதோடு மட்டுமல்லாமல், அவற்றை தங்கள் கருத்திற்கும் ஆதாரமாகவும் கூறிக்கொள்கிறார்கள். சிலர், இவ்வகையான பழிப்புரைகளை கூறுகிறோமே
அவற்றுக்கு ஆதாரம் ஏதேனுமுண்டா என்று ஆராய்ந்துப் பார்ப்பதில்லை.
இன்னும் சிலர், அவ்வகையான பழிப்புரைகளை, சந்தர்ப்பம் கிடைக்கும்
இடங்களில் எல்லாம் வேண்டுமென்றே பரப்பி வருகிறார்கள்.
இவ்வகையான பழிப்புரைகளை ஒரே வாக்கியத்தின் மூலம் புறம்
தள்ளிவிடலாம். இந்திய வரலாற்றின் ஆவணப்படி (மொஹிஞ்சதாரோ –
ஹரப்பா தவிர்த்து) சமண சிலைகள் கி.மு. ஒன்றாம் நூற்றாண்டு முதல் காணக்கிடைக்கின்றன. சிலைகள் என்றால் வழிபாடு இருந்திருக்கும் என்று சொல்லவேண்டுவதில்லை. :-)(ஆதாரம்: மதுரா அகழ்வாராய்ச்சி1)
தமிழகத்தைப் பொருத்தவரை, இலக்கியங்களில் குறிப்பாக மதுரைக்
காஞ்சி2 என்ற நூலிலும் சமணர்கள் இறைவழிபாடு செய்ததாகக் குறிப்புகள்
இருக்கின்றன.
வழிபாடு
வழி + படு என்பது வழிபாடு ஆகிற்று. வழிபடுதல் என்றால் நாம்
தொழத்தக்கவர்கள் யாரோ, அவர்களை வழிபடுவது. அவர்கள் சென்ற
வழியே அல்லது காட்டிய வழியை நாம் பயனிப்பது என்பது அதன்
நுண்ணியக் கருத்து. சமண வழிபாட்டின் நோக்கமும் அதுவே.
பாத வழிபாடு
பாத வழிபாட்டிலிருந்தே உருவ வழிபாடு தோன்றியது. இந்திய வரலாறு
நமக்குக் காட்டுவதும் அதுவே! சமணம் முழுமுதற் இறைவன் ஒருவனால் படைக்கப்பட்டதல்ல. சமணமும், பெளத்தமும், மனிதனால் உருவாக்கப்பட்ட
சமயங்கள். சமணம் போற்றும் தீர்த்தங்கரர்கள், நம்மை போன்று தாயின்
வயிற்றில் பிறந்து, பின் ஆன்மீயப் பயனத்தில், படி படியாக தங்கள் ஆள்வினை முயற்சிகளினால் இறைநிலை அடைந்தவர்கள். அவர்கள் தேசந்தோறும் திரிந்து
மக்களுக்கு அறிவுரைப் பகர்ந்து, தாங்கள் சென்ற மார்க்கத்தை/வழியை
மற்றவர்களும் உபதேசித்து அருளினார்கள். இதனால் இறைவன் என்ற பதம்
அல்லது சொல் தலைவன் என்றும் முனிவன்3 என்றும் சமணத்தில்
கொள்ளப்படுகிறது. அவர்களின் நினைவாக, மனிதர்களால் செய்து
வழிபட்டதுதான் பாதுகைச்/பாதச் சிற்பங்கள். இவ்வகையான பாத சிற்பங்கள்
இந்திய நாட்டின் முழுமையும் காணலாம்.
வழிபாட்டின் நோக்கமே, பெரியவர்கள்/தலைவர்கள்/சான்றோர்கள் சென்ற பாதையை/வழியை நாமும் பின்பற்ற வேண்டும் என்பதே! அஃதாவது,
அவர்கள் வழங்கிய/அருளிய அறக்கோட்பாடுகளை நாமும் பின்பற்ற வேண்டும்
என்பதின் குறியீடே இவ்வழிபாடு.
சாமாயிகம்4 அல்லது அறசிந்தனை
சமண இல்லறத்தார்கள் நாள்தோறும் குறைந்தது ஒரு வேளையாவது
அருக வழிபாடு செய்யவேண்டும். அருகரின் உருவ சிலையை மனதில்
நிறுத்தி, அவர் உபதேசித்தருளிய அறகோட்பாடுகளை நினைத்து அற வழிப்படல்
வேண்டும் என்பதுதான் சமணர்கள் கூறும் இறைவழிபாட்டின் நோக்கம்.
கதை கேளு
(எம் பெரியவர் திருவாளர்.வி.சி.ஸ்ரீபால் அவர்களின் கதையை இங்கு
எடுத்துக்காட்டி இருக்கிறேன். அன்னாருக்கு நம் மனமார்ந்த நன்றிகள்)
சமண இறைவழிபாட்டிற்கும், மற்ற சமயங்களின் இறைவழிப்பாட்டிற்கு
நுண்ணிய வேறுபாடுண்டு. அவற்றையும் ஈண்டு ஒரு கதையின் மூலம்
பார்ப்போம்.
ஒர் ஊரில், ஒரு பள்ளியில், தமிழ் ஆசிரியர் ஒருவர் இருந்தார். அவர்
உண்மையின் உறைவிடம்; நேர்மையின் அடையாளம்; தமிழ்ப் பண்டிதர்;
புலமையில் பேரறிஞர். அப்பள்ளியில், மாணவர்களால் மிக விரும்பப்படுபவரும்
அவரே. மாணவர்கள் அவரின் வகுப்பில் மிக ஈடுபாட்டுடனும், மிக ஆர்வமுடனும்
பாடம் கேட்பார்கள். ஆனால், பரிட்சையில் அவ்வாசிரியரின் பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை! ஏன்?
அதே ஊரில் உள்ள வேறொரு பள்ளியில் தமிழாசிரியர் ஒருவர் இருந்தார்.
அவரும் முன்னர் சொன்ன ஆசிரியர் போல் அனைத்து குணங்களும் நிரம்ப
பெற்றவர். அவரும் மாணவர்களால் விரும்பப்படுபவர். மாணவர்கள், இவரின்
வகுப்பு எப்போது வரும் என்று ஆர்வமாகக் காத்திருப்பார்கள். ஆனால்,
இவ்வாசிரியரின் மாணவர்கள் அனைவரும் பரிட்சையில் தேர்ச்சியடைந்தார்கள்!
எப்படி?!!
முதலில் சொன்ன மாணவர்கள் பரிட்சையில் ஆசிரியரின் குணங்களையும்,
அவரின் ஆற்றல்களை போற்றி, புகழ்ந்து எழுதினார்கள். ;-)
ஆனால், பின் சொன்ன மாணவர்களோ, பரிட்சையில் தங்கள் ஆசிரியர் கற்றுக்
கொடுத்த பாடங்களைக் கொண்டு பதில் எழுதினார்கள்!! தேர்ச்சியும் பெற்றார்கள்.
முன்னது மற்ற சமயங்களின் வழிபாடு!
பின்னது சமண சமயம் போதிக்கும் வழிபாடு!
நுண்ணியதாக இருந்தாலும், அவைக் காட்டும் கோட்பாட்டில் எத்தனை
வித்தியாசங்கள்!!
சமணம், வழிபாட்டில் வியாபாரம் நோக்கம் இருக்கக் கூடாது என்று சொல்கிறது. அஃதாவது, தனக்கு ஒன்று வேண்டும் என்று இறைவனிடம் முறையிடுவதை அது
அற வியாபாரம் என்று சொல்கிறது. ”இத்தை” வியாபாரம் என்று சொல்லாமல்
வேறென்ன வென்று அழைப்பது? சிந்தியுங்கள்!
குறளாசிரியரான தேவர் பெருமான் இறைத் தன்மைகளில் ஒன்றாக
“வேண்டுதல் வேண்டாமை இலான்” என்ற குணத்தைக் குறித்திருக்கிறார்.
வேண்டுதல் வேண்டாமை இலான் என்றால் “விருப்பு – வெறுப்பு” என்ற
பேதம் அற்றவர் என்றுப் பொருள். அவரை வணங்கினால் நமக்கு
நன்மைகளையும், நம்முடையத் துன்பங்களையும் போக்குவார் என்று
நினைத்து வணங்குவதும், அவரைத் தூற்றினால் நமக்கு கெடுதல்
செய்வார் என்று நினைப்பதும் “தேவ மூடமாம்5”.
வேண்டுதல் வேண்டாமை இலான்
இங்கு அன்பர்களுக்கு ஒரு கேள்வி எழலாம்? எழவேண்டுமே!! ;-)
குறளாசிரியர் குறள்,
“வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல” – குறள் – 4
வேண்டுதல் வேண்டாமை இல்லாதவனான இறைவனை வணங்கினால் எந்த
துன்பமும் வராது என்று சொல்கிறாரே என்று கேட்டீர்களானால், பதில் அதிலேயேயிருக்கிறது.
வேண்டுதல் வேண்டாமை இல்லாத குணம் கொண்டவன் இறைவன் என்று
கூறும் குறளாசிரியர், அவரை வணங்கினால் நம்முடையத் துன்பங்களை
இல்லாமல் செய்துவிடுவார் என்று முரணாக எழுதுவாரா? சிந்தனை செய்
மனமே!
அக்குறளுக்கு அவ்வாறு பொருள் கொள்ளக் கூடாது!
அக்குறளுக்கு பொருள்தான் என்ன?
வேண்டுதல் வேண்டாமை இல்லாத இறைவன் காட்டிய மார்க்கத்தில் அல்லது
அறவழியில் நடந்தால் நாமும் அவர் சென்றடைந்துக் காட்டிய வீடுபேற்றை
அடையலாம் என்பதுதான் அக்குறளின் உட்பொருள்.
குறளின் விசேஷமே அதுதான். குறளறம் எல்லா தரப்பு மக்களுக்கும்
கூறப்பட்டது. மக்கள் எல்லா நிலைகளிலும் இருப்பர். அவரவர் நிலைகளில்
(ஆன்மிகப் பயணத்தில்) புரியும் வண்ணம் குறளறம் கூறப்பட்டிருக்கிறது.
விளிம்பு நிலை மாந்தர்களுக்கும் குறளறம் பயன்படவேண்டுமல்லவா!
இன்னும் சந்தேகம் தெளியாதவர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு மேலும் ஒரு
காட்டுக் கொடுத்தமைவோம்.
நிலமிசை நீடுவாழ்வர்
திருக்குறளின் 3ஆவது பாட்டு,
“மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்”
மலர்மேல் நடந்தவனது அடிகளை சேர்ந்தவர்கள் நிலத்தின்/பூமியின் கண் நீடு
வாழ்வார்கள் என்று பொருள் எடுத்துக் கொண்டால்; பிறந்தவர்கள் இறப்பது
நிச்சயம் தானே. அது தானே உலக நடப்பு. அப்படியிருக்குபோது குறளாசிரியர்
நிலத்தின் கண் நீடு வாழலாம் என்கிறாரே. அவருக்கு உலக நடப்பு தெரியாமல் எழுதிவிட்டாரா? அவ்வாறுக் கூறுதல் கூடாது.
விளிம்பு நிலை மாந்தர்கள் அவ்வாறு பொருள் கொள்ளலாம். ஆனால்,
விளிம்பு நிலையிலிருந்து உயர்ந்தவர்கள் அவ்வாறு பொருள் கொள்ள
மாட்டார்கள்.
பிறந்தவர்கள் இறந்தே ஆகவேண்டும் என்ற வகையில் பார்த்தால், இங்கே
நிலமிசை நீடுவாழ்வார் என்பது மலர்மேல் நடந்தவனை வழிபட்டால் அல்லது
அவர் அருளிய அறவழிபடி நடந்தால், சம்சார சுழற்சியில் இருந்து விடுபட்டு,
நிலம்-பூமியின் உச்சியில் (வீடுபேறடைந்த உயிர்கள் தங்கும் இடம்) நீடு
வாழலாம் என்பதுதான் அக்குறளின் நுண்ணியப் பொருள்! என்னை?
இரா.பானுகுமார்,
சென்னை
==============================================
குறிப்புகள்:
1. "Historian and renowned archaeologist Fuhrer narrates the antiquity of Jainism at Mathura like this: "This stupa is so ancient that till writing of the inscription the original description of the stupa has gone out of local populace's memory." Innumerable Jain sculptures discovered from several sites at Mathura prove beyond doubt that Jainism remained prevalent in this region for many centuries and also got patronage of many of the contemporary successive rulers of this part of the world."
( http://en.brajdiscovery.org/index.php?title=Mathura )
( http://www.cs.colostate.edu/~malaiya/mathura.jpg )
2. மதுரை காஞ்சி:
வண்டுபடப் பழகிய தேனார் தோற்றத்துப்
பூவும் புகையும் சாவகர் பழிச்சச்
சென்ற காலமும் வரூஉம் அமயமும்
இன்றிவண் தோன்றிய ஒழுக்கமொடு நன்குணர்ந்து
வானமும் நிலனுள் தாமுழுதுணரும்
சான்ற கொள்கைச் சாயா வாழ்க்கை
ஆன்றடங் கறிஞர் செறிந்தனர் நோன்மார்
(அடிகள் : 475-482)
........................... .................
.................... வயங்குடை நகரத்துச்
செம்பியன் றன்ன செஞ்சுவர் புனைந்து
நோக்குவிசை தவிர்ப்ப மேக்குயர்ந்தோங்கி
இறும்பூது சான்ற நறும்பூஞ் சேக்கையும்
குன்றுபல குழீஇப் பொலிவன தோன்ற
(அடிகள் : 484-488)
( http://www.tamilvu.org/courses/diploma/a071/a0713/html/a0713112.htm )
3. மயிலையாரின் "ஆய்வுக் கட்டுரைகள்" - மூன்றாம் தொகுதி - மக்கள்
வெளியீடு
( http://www.treasurehouseofagathiyar.net/29800/29834.htm )
4. http://www.treasurehouseofagathiyar.net/37700/37787.htm
5. வாழ்விப்பர் தேவர் எனமயங்கி வாழ்த்துதல்
பாழ்பட்ட தெய்வ மயக்கு - அருங்கலச் செப்பு - பாடல் - 31
Sunday, November 06, 2011
பகவன்
பகவன்
- காஞ்சிபுரம். தி. அனந்தநாத நயினார்
பக என்பதற்கு ‘ஞானம்’ என்பது பொருளாம். அதனடியாக உண்டான ‘பகவன்’
என்பதற்கு ‘ஞானமுள்ளவன்’ என்று அர்த்தமாகிறது. எனினும் சாமானியமாக
ஒருவனுக்கு ஞானமிருப்பதினாலேயே அவனைப் ‘பகவன்’ என்று சொல்லிவிட
முடியாது. அப்படிச் சொல்லப் புகுந்தால் ஞானமுள்ள எல்லா ஜீவன்களையுமே
‘பகவன்’ என்று சொல்ல வேண்டும், அவ்வாறு கொள்ளுதல் கூடாது.
ஆதலின், ‘பகவன்’ என்ற நாமதேயத்தை, இதர ஜீவன்களைக் காட்டிலும்
விசேஷ ஞானமுள்ள சர்வக்ஞ பரமாத்மனுக்குப் பெரியோர்கள்
உபயோகித்திருக்கிறார்கள். ஸ்ரீ ஆதீஸ்வரஸ்வாமி சர்வக்ஞனாக இருப்பதால்,
‘பகவன்’ என்ற பெயர் அந்த ஸ்வாமிக்குப் பொருத்தமானதாக இருக்கிறது.
பக்ஷபாதமில்லாமல் நாம் உண்மையை விளக்கும் உயர்ந்த பல
சாஸ்திரங்களையும் ஆராய்ந்து பார்ப்போமானால், ராக, த்வேஷ, மோக
காமம், வெகுளி, மயக்கம்) ஜன்ம, மரண முதலான தோஷங்களுக்கு
ஆதீனனாகிய ஜீவன் ஒருபோதும் சர்வக்ஞனாக இருக்க முடியாதென்பது
நமக்கு விளக்கமாகத் தெரியவரும். அங்ங்னமிருக்க மயக்க சாஸ்திரங்கள்
மேற்சொன்ன ராக த்வேஷ மோக முதலான விகாரங்களுக்குள்ள
ஜீவன்களைக் கூட சர்வக்ஞனென்று சொல்லுகின்றன; ஆனால், தத்துவ
போதமுள்ள ஞானிகள் இதை ஒப்புக் கொள்ள மாட்டார்கள். ஆகையால்
ராக த்வேஷ மோக முதலான விகாரங்களின்று சம்பூர்ணமாக நீங்கியிருக்கிற
பரமாத்மனே சர்வக்ஞனாவன். அதாவது ‘பகவன்’ என்ற
திருநாமத்திற்குரியவனாவன்.
ஸ்ரீ ஆதி தீர்த்தங்கரஸ்வாமி மேற்சொன்ன சகல விகாரங்களினின்றும்
நீங்கியிருப்பவன் என்பதும், அதனால் சர்வக்ஞனென்பதும் ஜைந சமய
சாஸ்திரங்களை ஆராய்ச்சி செய்தால் நன்கு விளங்கும். இந்த நியாயம்
பற்றி ஆதிநாத ஸ்வாமியையே ‘பகவன்’ என்று திருக்குறள் ஆசிரியர்
கூறியிருக்கின்றார்.
இனி, ‘பக’ சப்தத்திற்கு ‘யஸஸ்’ என்ற மற்றொரு அர்த்தம் இருப்பதால்;
இதன்படி , பக்வன் என்பதற்கு, யஸஸ்ஸுடையவன் என்று அர்த்தமாகும்;
ஆதலின், இப்பெயர் மூன்று லோகங்களிலேயும் வியாபித்திருக்கும் ‘யஸஸ்’
ஸை அடைந்தவராகிய ஸ்ரீ ஆதீஸ்வரஸ்வாமிக்கே தகும்.
ஸ்ரீ ஆதிபகவான், லோகோத்தாரணத்துக்காகச் சமவசரண விராஜமானராக
விருந்தபோது, மூவுலகங்களிலுமுள்ள பவ்விய பிராணிகள் அந்தச்
சமவசரணத்துக்கு வந்து, பூர்ண சந்திர மண்டலத்தைத் தாராகணங்கள்
சுற்றியிருப்பதைப் பொள் சுவாமியைச் சுற்றிலும் பக்தி வணக்கத்தோடு
சூழ்ந்து அவரது தர்மோபதேசமென்னும் அமிர்தபானத்தைச் செய்து
அஜராமரத்வத்தை (மூப்பு, சாக்காடு) அகற்றக் கூடிய ஒழுக்கத்தை
சம்பாதித்துத் தங்கள் தங்கள் இருப்பிடங்களுக்குத் திரும்பிப் போய்
ஆங்காங்குப் பகவந்தனது ‘யஸஸ்ஸை’க் கொண்டாடினார்கள்.
ஆகையால் ஆதி பகவனது திவ்ய ‘யஸஸ்’ மூவுலகங்களிலும்
வியாபித்தது. இப்படி லோகோத்தர ‘யஸஸ்ஸை’ அடைந்த
ஆதீஸ்வர ஸ்வாமியானவர் ‘பகவன்’ என்று மஹரிஷிகளால்
ஸ்துதிக்கப் பட்டிருக்கிறார்.
மேற் கூறியபடி பலரும் பகவானைச் சூழ்ந்து கொண்டாடினார்கள் என்பதை, ”ஆதீஸ்வரஸ்வாமியின் சமவசரணத்தில் பன்னிரெண்டு விதமான கணங்கள்
திவ்யோப தேசத்தைக் கேட்கக் கூடினார்கள்” என்று மகாபுராண சுலோகம்
விளக்கும்.
பன்னிரெண்டு வித கூட்டங்களாகக் கூடியிருந்த மூன்று லோகங்களிலுமுள்ள
பவ்விய பிராணிகள் இந்த மூன்று லோகங்களிலும் சுவாமியின் லோகாதி
சாயியான யஸஸ்ஸைக் கொண்டாடினதினாலும், அந்த யஸஸ்ஸே, ‘பக’
என்று சொல்லப்படுவதாலும் அந்த யஸஸ்ஸக்குப் பாத்திரராகிய ஸ்ரீ ஆதி
தீர்த்தங்கரரே ‘பகவன்’ என்று சொல்லப் படுகிறார்.
இனி, ‘பக’ என்பதற்கு ‘மாஹாத்மயம்’ என்ற அர்த்தமும் இருப்பதால் ஸ்ரீ
ஆதி தீர்த்தங்கரர் என்னும் ஆதிபகவன் ஸ்வபாவாதிசயம் பத்து,
கர்மக்ஷயாதிசயம் பத்து, தெய்வீகாதிசயம் பதினான்கு ஆகிய இந்த
முப்பத்திநான்கு அதிசயங்கள் தாமே தோன்றிய மாஹாத்மய
முடையவராதலால் அந்த வகையிலும், ‘பகவன்’ என்ற நாமம்
அவர்க்கே தகும்.
இன்னும், ‘பக’ என்பதற்கு ‘முத்தி’ என்ற அர்த்தமுமிருப்பதால், ‘பகவன்’
என்பதற்கு ‘முக்திக்குரியவன்’ என்று பொருளாம். ஸ்ரீ ஆதிநாதபகவான்
‘முத்தி’யை அடைந்திருகின்றார்; பிறருக்கும் மோக்ஷ ஸ்வரூபத்தை உபதேசித்திருக்கின்றார்; இவர் அடைந்ததும், பிறருக்குபதேசிக்கப்பட்டதுமான
முத்தியே சரியானது. இதனை “நூற்றுக்கணக்கான கல்பங்கள் கழிந்து
போனாலும் மூவுலகத்தையும் பிரமிக்கச் செய்யும் உத்பாதங்கள்
உண்டானாலும் மூத்த ஜீவன்களிடத்தில் எவ்விதமான விகாரமும்
உண்டாவதில்லை” என்று மகாபுராணச் சுலோகம் விளக்கும்.
அநேக இதர மதக் கிரந்தங்களில் முத்தியடைந்தவர்கள் ஒரு காலத்தில்
மறுபடியும் சம்ஸாராவஸ்த்தைக்கு வருவார்களென்பது சொல்லப்பட்டிருக்கிறது.
ஸ்ரீ ஆதிநாத பகவந்தன் அடைந்ததும், பிறருக்குபதேசித்ததுமான ‘முத்தி’
யானது, பிறவிக் கிடமில்லாததாயும் சர்வோத் கிருஷ்டமானதாயுமிருக்கின்றது. இப்பேர்ப்பட்ட முத்தியை அவர் அடைந்திருப்பதால் ‘பகவன்’ என்ற
பவித்ர நாமத்திற்கு யோக்கியமானவர் அவரேயாவர்.
பின்னும், ‘பக’ என்ற பதத்திற்கு “ஐஸ்வரிய’ மென்ற அர்த்தமுமிருப்பதால்,
‘பகவன்’ என்பதற்கு “ஐஸ்வரியமுள்ளவன்’ என்றும் பொருளாம். ஆதிநாத
சுவாமியின் அவதார முதல் கைவல்ய பரியந்தம் இவ்வுலகின் சகல
ஐஸ்வரியங்களும் மேல்படி ஸ்வாமியின் சரணாரவிந்தங்களில் இருப்பனவாகத் தெரிகின்றன. ஆத்ம சம்பத்தும் மேற்சொன்ன விஷயங்களினாலும்
இப்புத்தகத்தில் விளக்கிய இதர விஷயங்களாலும் அவரிடத்தில்
அமைந்திருக்கின்றது என்பது விளங்கும். இப்படி அசாதரணமாகிய
ஐஹிக பாரமார்த்திக (இகபரலோக) சம்பத்துக்களுக்கு ஸ்வாமி
உடையவராதலால், ‘பகவன்’ என்ற பெயர் அவர்க்கே தகும்.
மேலும், ‘பக’ என்பதற்கு ‘வீரிய’மென்ற அர்த்தமிருப்பதால், ‘பகவன்’
என்பதற்கு, “வீரியமுள்ளவன்” என்றும் பொருளாம். ஆத்ம பலமே
வீரியமென்று சொல்லப்படும். சம்ஸாரத்தில் சகல பிராணிகளுக்கும்
ஜன்ம மரண துக்கங்களுக்குக் காரணமாயிருக்கின்ற கர்மம்க்களைச்
சம்பூர்ணமாகச் சமஹரித்துத் கைவல்யத்தை அடைந்ததான ஆத்ம
பலத்தை சுவாமி அடைந்திருப்பதாலும் மூவுலகங்களிலும் இதரர்களுக்கு
அலப்பியமான (கிடைக்கத்தகாதது) சகல சம்பத்துக்களும் இந்த ஆதி
தீர்த்தங்கரருக்கிருந்தும் இவர் அவைகளைச் சம்பூர்ணமாகத் தியாகம்
செய்து பரம வைராக்கியத்தை அடைந்ததினாலும், ‘பகவன்’ என்ற
பெயருக்கிவரே உரியவராவர்.
இன்னும் ‘பக’ என்பதற்கு தர்மம் என்ற அர்த்தமிருப்பதால் ‘பகவன்’
என்பதற்கு “தர்மத்திற்குரியவன்” என்றும் பொருளாம். ஆதிநாத சுவாமி
தாமே தர்ம மூர்த்தியாக இருந்து உலகத்திற்கு அஹிம்ஸை முதலான
அநேக தர்மத்தைப் போதித்திருக்கின்றார். ஆதலின் இந்த வகையிலும்
‘பகவன்’ என்ற பெயர் அவருக்கே உரியதாகும்.
இவற்றை எல்லாம் நன்கு ஆராய்வோர்ம் திருக்குறளாசிரியர் (ஆதி)
பகவன் என்ற சொல்லால் அருகக் கடவுளையே குறிப்பிட்டு வணங்கி
இருக்கிறார் என்பதை ஐயமற உணர்ந்துக் கொள்ளலாம்.
சுபம்!
Friday, November 04, 2011
திரிகடுகக் குறிப்பு - 1
திரிகடுகம்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று திரிகடுகம். அந்நூலின் 36ஆவது பாட்டு,
ஊனுண் டுயிர்கட் கருளுடையே மென்பானுந்
தானுடன்பா டின்றி வினையாக்கு மென்பானுங்
தாமுறு வேள்வியிற் கொல்வானும் இம்மூவர்
தாமறிவர் தாங்கண்ட வாறு – திரிகடுகம் – 36
http://www.tamilvu.org/slet/l2200/l2200uri.jsp?song_no=36&book_id=43&head_id=43&sub_id=1054
(இ-ள்.) ஊன் உண்டு - ஒன்றின் மாமிசத்தைத் தின்று, உயிர்கட்கு - உயிர்களிடத்தில், அருள் உடையேம் - தயவுடையோம், என்பானும் - என்று சொல்வானும்; தான் உடன்பாடு இன்றி - தான் (யாதொரு முயற்சிக்கும்) உடன்படாமல், வினை ஆக்கும் - ஊழ் (எல்லாம்) செய்யும், என்பானும் - என்கிறவனும்; காமுறு - (ஒரு பயனைப்பெற வேண்டிச் செய்ய) விரும்புகின்ற, வேள்வியில் - யாகத்தில், கொல்வானும் - (ஓருயிரைக்) கொலை செய்வானும்; இ மூவர் - ஆகிய இம் மூவரும், தாம் கண்ட ஆறு - தாங்கள் அறிந்தபடியே, தாம் அறிவர் - தாங்கள் அறிந்தவராவர்; (எ-று.)
(க-ரை.) தன் உடலைப் பெருக்கும் விருப்புடன் உயிரைக் கொன்று
தின்றும் எனக்கு உயிர்மீது இரக்கமுண்டு என்று பகர்வதும், எல்லாம்
விதியினால் வருகிறதென்று சொல்லிச் சோம்பி இருப்பதும், இம்மைப்
பயன் கருதிச் சில சடங்குசெய்து உயிரைக் கொல்வதும் நூல்களின்
உண்மை யுணராதவர் செய்கைகளாம்.
உயிர்கட்கு : உருபு மயக்கம். உடன்பாடு : முதனிலை திரிந்த தொழிற்பெயர்.
வினை - ஊழ்; முன்வினைப்பயன் ஒருவன் தனக்குள் தானொன்றைக்
கருதும்போது தன்னைத் தன்மைப்பன்மையாக வைத்துக் கூறுதல்
மரபாதலால் உடையேம் என்பது வழாநிலை. காமுறு வேள்வியாவது
- தான் விரும்பிய பொருளை அடையும் பொருட்டுச் செய்யப்படும் யாகம்.
அறநூலின் கருத்தை அறிவுடையோர்பாற் கேட்டு உண்மை
உணர்ந்திலராதலால், தாங் கண்டவாறு தாம் அறிவர் எனப்பட்டது.
ஆக்கும் என்ற குறிப்பால் வினை ஊழை உணர்த்தியது.
=====================================
என் குறிப்பு:
1.”தன் உடலைப் பெருக்கும் விருப்புடன் உயிரைக் கொன்று தின்றும் எனக்கு
உயிர்மீது இரக்கமுண்டு என்று பகர்வது” – பெளத்த தர்சனம்
2.”எல்லாம் விதியினால் வருகிறதென்று சொல்லிச் சோம்பி
இருப்பதும்” – ஆசிவக தர்சனம்
3.”இம்மைப் பயன் கருதி வேள்விகளில் சில சடங்கு செய்து உயிரைக்
கொல்வதும்” – வேத தர்சனம்
மேலே கூறிய மூன்று தரிசனங்களை மேற்கொண்டவர்கள், நூலின்
உண்மையை உணராதவர்கள் என்பது பாடம்.
இரா.பானுகுமார்,
சென்னை
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று திரிகடுகம். அந்நூலின் 36ஆவது பாட்டு,
ஊனுண் டுயிர்கட் கருளுடையே மென்பானுந்
தானுடன்பா டின்றி வினையாக்கு மென்பானுங்
தாமுறு வேள்வியிற் கொல்வானும் இம்மூவர்
தாமறிவர் தாங்கண்ட வாறு – திரிகடுகம் – 36
http://www.tamilvu.org/slet/l2200/l2200uri.jsp?song_no=36&book_id=43&head_id=43&sub_id=1054
(இ-ள்.) ஊன் உண்டு - ஒன்றின் மாமிசத்தைத் தின்று, உயிர்கட்கு - உயிர்களிடத்தில், அருள் உடையேம் - தயவுடையோம், என்பானும் - என்று சொல்வானும்; தான் உடன்பாடு இன்றி - தான் (யாதொரு முயற்சிக்கும்) உடன்படாமல், வினை ஆக்கும் - ஊழ் (எல்லாம்) செய்யும், என்பானும் - என்கிறவனும்; காமுறு - (ஒரு பயனைப்பெற வேண்டிச் செய்ய) விரும்புகின்ற, வேள்வியில் - யாகத்தில், கொல்வானும் - (ஓருயிரைக்) கொலை செய்வானும்; இ மூவர் - ஆகிய இம் மூவரும், தாம் கண்ட ஆறு - தாங்கள் அறிந்தபடியே, தாம் அறிவர் - தாங்கள் அறிந்தவராவர்; (எ-று.)
(க-ரை.) தன் உடலைப் பெருக்கும் விருப்புடன் உயிரைக் கொன்று
தின்றும் எனக்கு உயிர்மீது இரக்கமுண்டு என்று பகர்வதும், எல்லாம்
விதியினால் வருகிறதென்று சொல்லிச் சோம்பி இருப்பதும், இம்மைப்
பயன் கருதிச் சில சடங்குசெய்து உயிரைக் கொல்வதும் நூல்களின்
உண்மை யுணராதவர் செய்கைகளாம்.
உயிர்கட்கு : உருபு மயக்கம். உடன்பாடு : முதனிலை திரிந்த தொழிற்பெயர்.
வினை - ஊழ்; முன்வினைப்பயன் ஒருவன் தனக்குள் தானொன்றைக்
கருதும்போது தன்னைத் தன்மைப்பன்மையாக வைத்துக் கூறுதல்
மரபாதலால் உடையேம் என்பது வழாநிலை. காமுறு வேள்வியாவது
- தான் விரும்பிய பொருளை அடையும் பொருட்டுச் செய்யப்படும் யாகம்.
அறநூலின் கருத்தை அறிவுடையோர்பாற் கேட்டு உண்மை
உணர்ந்திலராதலால், தாங் கண்டவாறு தாம் அறிவர் எனப்பட்டது.
ஆக்கும் என்ற குறிப்பால் வினை ஊழை உணர்த்தியது.
=====================================
என் குறிப்பு:
1.”தன் உடலைப் பெருக்கும் விருப்புடன் உயிரைக் கொன்று தின்றும் எனக்கு
உயிர்மீது இரக்கமுண்டு என்று பகர்வது” – பெளத்த தர்சனம்
2.”எல்லாம் விதியினால் வருகிறதென்று சொல்லிச் சோம்பி
இருப்பதும்” – ஆசிவக தர்சனம்
3.”இம்மைப் பயன் கருதி வேள்விகளில் சில சடங்கு செய்து உயிரைக்
கொல்வதும்” – வேத தர்சனம்
மேலே கூறிய மூன்று தரிசனங்களை மேற்கொண்டவர்கள், நூலின்
உண்மையை உணராதவர்கள் என்பது பாடம்.
இரா.பானுகுமார்,
சென்னை
Subscribe to:
Posts (Atom)